புதன், 30 அக்டோபர், 2013

ஒளி

சுடரின் ஒளிவட்டம்
இருள் வட்டம் கடந்த
ஞானவட்டத்தில் ஒளிந்திருக்கிறது
தீபத்தின் பிரகாசம்
******
உன் விரல்கள் ஏற்றிய
தீபக்கண்ணிகளில்
நான் இப்போது நெய்
******
ஆயிரம் தீபங்களின்
ஏகாந்த ஒளிப்பொழிவு
சற்றே தலைசாய்த்த
உன் மந்தகாச புன்னகை
******
பத்து விரல் திரி
பற்றி எரியும் நகச்சுடர்
நடமாடும் தசமுக விளக்கு நீ
******
உன் முகத்தை என் கைகளில்
ஏந்தியபொழுது
ஒரு தீபமாகியிருந்தது அது
******
ஆண்டுதோறும் தலைதீபாவளி
தினமும் உன்னால்
இன்று புதிதாய் பிறந்தேன்
******
*நன்றி: சூரியகதிர் நவம்பர் - 2013 இதழ்

திங்கள், 22 ஜூலை, 2013

கூசும் சூரியன்



எங்கள் வீட்டு 
வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள்
வானவில் வரைந்தவை

பிஞ்சு மழலை பிதற்ற
தேனெடுக்கப் போன முதல்நாளில் 
தேம்பியழுதபடி திரும்பி வந்தது 

குழலும் யாழும்
வெம்பி வெடிக்க 
வாசலிலேயே முறைப்பாடு 

வண்ணத்துப்பூச்சியின்
விரியத்துடித்த சிறகுகளில் 
வன்பிரம்பின் விளையாட்டு 

அது உருவாக்கியிருந்தது 
ஒருதுளி கருஞ்சிவப்பு சூரியன்!
******

புதன், 23 மே, 2012

பயணச்சீட்டு


சில்லறை கேட்டு
சிலிர்க்கும் நடத்துநர்கள்
எச்சில் தொட்டு கிழிக்கிறார்கள்
பயணச்சீட்டு!
******

ஒவ்வொரு முறையும் இறங்கி
பத்தடி நடந்த பிறகுதான்
ஞாபகம் வந்து தொலைக்கிறது;
பயணச்சீட்டுக்குப் பின்னால்
எழுதிய மீதிச் சில்லறை!
******
*நன்றி: குமுதம் 30.05.2012 இதழ்

புதன், 21 மார்ச், 2012

பெருங்கடல்

ஒவ்வோர் உண்மையின்
மறுபக்கமும் இருக்கிறது
இன்னொரு உண்மை;
அது மறுதலிக்கப்படும்போது
வெற்றிடத்தை நிரப்புகிறது பொய்
******

ஆடு உறவு
குட்டி பகை
கள்ளக்காதல்
******

எப்போதும் சொல்லப்படுகின்றன
வாழ்த்துகள்
அவரவர் வாழ்க்கையை
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்...
******
உரக்கக் குரலெழுப்புவதைவிட
அமைதியே அழகு
உண்மையெனில்,
நாம் எப்போதும்
சப்தத்தால் மொழிபெயர்க்கிறோம்
பொய்களை
******

ஒருதுளி
தயக்கத்தின் இழப்பு,
ஊளையிட்டு அரற்றுகிறது
பெருங்கடல்
******

தயங்கித் தள்ளியே
நிற்கிறது நிழல்
சிபாரிசுக்கு வந்தவரைப் போல
******

*நன்றி: சூரியகதிர் மார்ச் 16 - 31 இதழ்

வெள்ளி, 10 ஜூலை, 2009

முக்கண்ணன்!

மனசுக்குள் மந்திரம்
பொங்கல் நெய்வேத்தியம்
சுகப்படும்போது பூஜை –
காலங்காலமாய்
கல்யாணசுந்தர குருக்கள்
பக்தர்களுக்கும்,
ஆறுகால பூஜைக்கும்...

வழக்கத்தில்
வழக்கற்று விழுந்தது
சொக்கப்பனைத் தீ;
மூச்சுத்திணறலை
இறுகப்பற்றிற்று இளையதலைமுறை...

வாய்நிறைய
வடமொழி ஸ்லோகம்
வாச வெண்மிளகுப் பொங்கல்
பக்கத்தூர் புதிய படிக்கூலி...
சிரிக்கும் சிரிப்பில்
சுவாமிநாதரே சுவாமியென
ஊர் பேசிற்று...

கூலிப்படியோ கூட்டுப்பொரியல்...

பிரதோஷ பூஜை
தக்ஷிணாமூர்த்தி பூஜை
ராகுகால துர்க்கா பூஜை
சிவன்கோயில் சிலைகளும்
பக்தர்களோடு உற்சவமூர்த்திகள்!

எல்லா அமோகத்திலும்
காலச்சக்கரம்
மூத்த தலைமுறைக்கு...

இரவோடு சிக்கறுப்பு
சுவாமிநாதருக்கு;
கையில் மணியோடு
கல்யாணசுந்தரம்
பிற்பாடு பிரகார வலம்...

பதவி, வியபாரம், பக்தி –
பார்த்துக்கொண்டேயிருக்கிறான்
முக்கண்ணன்!
******

சனி, 4 ஜூலை, 2009

மூன்று கவிதைகள்


வீட்டுக்கு வீடு
மனிதர்கள் வாழ்கிறோம்;
பாதுகாப்பிற்கு வளர்க்கிறோம்
நாய்கள்...!
******

முதலாளிகள் மட்டுமன்றி
வேடிக்கை பார்ப்பவனுக்கும்
பிடித்திருக்கிறது
வேலை செய்பவனை...
******

சாலையைக் கடக்க
காத்திருந்தவர்களுக்காக
முதல் ஆளாய் நிறுத்தினேன்
வண்டியை –
என்னில் திறந்தது வழி!
******

புதன், 17 ஜூன், 2009

மல்லாட்ட...

மணிலாக்கொல்லை
முன்னிரவுக் காவல்கள்
மிகவும் சுவாரஸ்யமானவை

அங்கொன்றும் இங்கொன்றுமாக
அண்டைக் கொல்லைகளிலும் சேர்த்து
கைக்கொண்ட வரை
சுட்டுத்தின்போம் செடிபிங்கி

முதலியார் கடை
வெல்லம் உபயம்
வீட்டு மளிகைக்கணக்கு

ஆசைப்பட்டு வாங்கினால்
இரண்டு ரூபாய்க்கு
பத்தே பத்து வறுகடலைகளை
கூம்புப் பொட்டலமாய் நீட்டுகிறான்
நகரத்தெருவின் தள்ளுவண்டிக்காரன்...
******
* மல்லாட்ட... மணிலாக்கொட்டையின் பேச்சு வழக்கு. புதுச்சேரி & தென்னாற்காடு மாவட்டங்களாகிய எங்கள் பகுதிகளில் வேர்க்கடலை - மணிலாக்கொட்டை என்றுதான் அழைக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வேர்க்கடலை ரகம் இப்பகுதிகளில் பயிரிடப்படுவதால் இந்தப்பெயர்.

திங்கள், 15 ஜூன், 2009

வாசம்


குளித்த பிறகுதான்
ஒவ்வொரு முறையும்
அனுமதிக்கிறாய்;
ஆனாலும்,
இறுதி ஆசுவாசத்திற்கு
வியர்வை வாசம் மார்பில்
முகம் புதைக்க தேடுகிறேன்...
******

சனி, 13 ஜூன், 2009

வலி

எந்த ஒன்றிலும்
ஏதேனும் ஒன்றை
வேண்டியோ விரும்பாமலோ
உதாசினப்படுத்துவது
நடந்தேறிவிடுகிறது...

அன்புக்குத்தான் வலி...

மறுபடியும்
மறுதாம்பு போல
வளர்த்தெடுக்க முடிவதில்லை
அன்பை...!
******

வெள்ளி, 12 ஜூன், 2009

சிற்பங்கள்

மௌனத்தில் உறைந்த சிற்பங்கள்
தன் அழகின் தீராத நாவுகளால்
முற்றுப் புள்ளியில்லாமல் எப்போதும்
பேசிக்கொண்டிருக்கின்றன...

சிவதாண்டவத்தின் போதும்
புரண்டு படுக்காத உறக்கத்தை
சூரியனாய் துயிலெழுப்பிய விரல்களை...

வைராக்கியங்களாய் இறுகிக் கிடந்த போதும்
வைரம் பட்ட கண்ணாடியாய்
இளகியதால் பெற்ற பேறு...

அறுத்துக் கொண்டிருந்தாலும் இழந்ததை
பொறுத்துக் கொண்டிருக்கும் கரைகளால்
நதியென்ற பெருமை...

முன்னவன் அடைந்த ஞானப்பழத்தை
விட்டுக்கொடுத்ததால்
இளையவன் பெற்ற வெற்றிச் சிகரம்...

கரடுமுரடுகளையும் காண
கண்கோடி கேட்கும் நிலவின்
வசீகர அழகு வசிக்கிற பார்வை...

கண்திறக்கவே வழியில்லாத
கர்ப்பப் பூமியில்
கலையாகி நிற்கும் சரித்திரம்...

இப்படி
மௌனத்தில் உறைந்த சிற்பங்கள்
தன் அழகின் தீராத நாவுகளால்
முற்றுப் புள்ளியில்லாமல் எப்போதும்
பேசிக்கொண்டிருக்கின்றன...

தன்னை நினைத்து
மனிதர்களைப் பார்த்து
நெட்டி முறித்து நிமிர்ந்து நின்றது
ஒரு சிற்பம்!
******

வியாழன், 11 ஜூன், 2009

மெழுகுபொம்மை


உனக்குள்ளே சலனமில்லை
உன்னைச்சொல்லிக் குற்றமில்லை
உன்மேனி மெழுகியவன்
உண்மையிலே ஞானியவன்

கம்பன் கவியழகும்
ரவிவர்மன் கலையழகும்
இங்கு உயிர்த்தனவோ
இதயத்தை ஈர்க்கிறதே

செங்காந்தள் மென்விரலும்
செல்வியரின் கொடியிடையும்
எல்லாமாய் உனக்கிருக்கும்
எழுதிவைத்த விழியழகும்

ஆடையில்லை என்றாலும்
அழகென்றே சொல்கிறது
ஆசைகளைத் தூண்டிவிட்டு
மோகத்தால் கொல்கிறது

அலைகடலாய் இருந்தாலும்
அமைதியாக நடிக்கின்றாய்
ஆணவத்தின் சுவடுகளை
அடிக்காலால் மிதிக்கின்றாய்

சிகரத்து உச்சிகளின்
சிற்றரசன் எனைநீதான்
சிதறடித்தாய் பள்ளங்களில்
சிரிக்காதே சொல்லிவைத்தேன்

ஆயிரமாய் கனவுகளை
அடிமனதில் எழுப்பிவிட்டு
மௌனப்போர் நடத்துகிறாய்
மன்னிக்க மாட்டேன் நான்

நிலையில்லா உன்னழகு
நிஜம் பலவே சொன்னாலும்
உருவமில்லா வெப்பத்தால்
உருகிவிடும் நினைவில்கொள்!
******

புதன், 10 ஜூன், 2009

கூலி ஏர்

நடவுக்காலங்களில்
ஏர்களுக்கு ஏக கிராக்கி

டிராக்டர்களால்
ஏர் உழவு அருகினாலும்
அதில்தான் சேறு நிறையும்...

அந்தியில் வீடேகி
அப்பாவை ஏர்கேட்டு
பெரும்புள்ளிகள்(?)
முகதாட்சண்யம் பார்க்கும்

எத்தனை கிராக்கியிலும்
ஆளுக்கு ஒருநாளாவது ஏரோட்டுவார்

ஆனால், முப்பது ரூபாய் கூலிதர
நிலக்கிழார் நீலமேகரெட்டி
மூன்று தவணைகளாவது ஆகும்...

ஒவ்வொரு முறையும்
அடுத்த போகத்தில் அவருக்கு
ஏரோட்டுவதில்லை என்கிறார்;
கூலி ஏரோட்டியால்
அப்படி முடிவெக்க
எந்த -அடுத்தபோகத்தில்- முடிகிறது...?
******
(சுப.வீரபாண்டியனின் 'நந்தன்' ஏப்ரல் 16-30, 1999 இதழில் வெளிவந்தது)

செவ்வாய், 9 ஜூன், 2009

அழைப்பு


உன் ஒற்றை
அழைப்பிற்காக
காத்துக்கிடப்பவை
என் காதுகள் மட்டுமல்ல;
உயிரையே கிள்ளுகிற
ஒரு சொல்லால்
எப்போது அழைப்பாய்
சொல்...
******

திங்கள், 1 ஜூன், 2009

என்றென்றும்...


மறந்து விடச்சொல்லி
கடைசி கடிதம் வந்தது;
என்றென்றும் அன்புடன்...!
******

வெள்ளி, 29 மே, 2009

காகிதக் கப்பல்

பல்லவி

காகிதக் கப்பல் காத்திருக்கிறேன்
மழையே வருவாயா...
காற்றே பட்டம் வானமளக்க
வரங்கள் தருவாயா...

இருபக்கம் தானே காகிதம் என்றால்
ஒருபக்கம் நானல்லவா – அதன்
மறுபக்கம் நீயல்லவா...
(காகிதக் கப்பல்…)

சரணம் – 1

வெள்ளைத் தாளாய் விரிந்திருக்கிறேன்
ஓவியம் வரைவாயா
கவிதைகள் புனைவாயா...
செய்தித் தாளாய் சுமந்து நிற்கிறேன்
தகவல்கள் படிப்பாயா
மணமகள் தேவையா...
கேள்வித் தாளாய் உன் கையில் நானடா
தேர்வுத் தாளில் பதில்நீயும் எழுதடா...
(காகிதக் கப்பல்…)

சரணம் – 2

புத்தகம் என்னை புரட்டிப் படித்து
வாசகன் ஆவாயா
வேடிக்கை பார்ப்பாயா...
கடித மடலாய் உன்னிடம் வந்தேன்
பதிலொன்று எழுதிடுவாயா
வாழ்த்தட்டை பரிசளிப்பாயா...
சான்றிதழ் உனக்கு என்றும் நானடா
அழைப்பிதழ் அச்சிட அட்சதை போடடா...
(காகிதக் கப்பல்…)

******

புதன், 27 மே, 2009

காளை கண்

நெஞ்சு சளிக்கு நல்லதென்று
அதிக மிளகுத் தூளோடு
மித சூட்டில் பரிமாறப்படுகிற
ஆஃப் பாயில்களை
உடைந்து ஒழுகாமல்
சாப்பிடத்தெரியவில்லை-

நான் குடிகாரன்?
******

செவ்வாய், 14 ஏப்ரல், 2009

புனைபெயர்


மொட்டையாண்டி
நீலகண்டன்
ராணி
முல்லை என்று
தன் மக்களுக்கு
வழக்கற்றப்பெயர்களை
வைத்தவர் தாத்தா!

முதல் பேரன் என்னை
செல்வம் - என்றழைத்து
செல்லம் கொஞ்சியவரை
பாடுபொருளாக்கி
கவிதைகள் எழுதுகிறேன்
புனைபெயரில்...!
******